மும்பை தாக்குதல் திட்டம்

Monday 25 July 2011


புதுடெல்லி,ஜூலை 25: மும்பை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கான சதித் திட்டம் நேபாளத்தில் தீட்டப்பட்டதை மத்திய புலனாய்வு அமைப்புகள் கண்டு பிடித்துள்ளன.
மும்பையில் கடந்த 13ம் தேதி 3 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 23 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கான சதித் திட்டத்தை இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பும், பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.யும் நேபாளத்தில் தீட்டியதை மத்திய புலனாய்வு அமைப்புகள் கண்டு பிடித்துள்ளன.
இது பற்றி விரிவான விசாரணை நடத்த, மத்திய புலனாய்வு அமைப்புகள், மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படை அடங்கிய கூட்டுக்குழு நேபாளம் செல்ல உள்ளது.
குண்டு வெடிப்புக்கு முன்பு ஒரு வாரமாக நேபாளத்தில் இருந்து மும்பைக்கு சில குறிப்பிட்ட எண்களுக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. குண்டு வெடித்த பிறகும் இந்த எண்களுக்கு இடையே அதிகளவில் தொடர்பு இருந்துள்ளது. இவற்றை ஆய்வு செய்ததில் தான் சதித் திட்டம் அம்பலமாகி உள்ளது.
இந்தியாவுக்கு எதிராக நேபாளத்தில் சதித் திட்டம் தீட்டப்படுவது இது முதல் முறையல்ல. மும்பை தாதா கும்பல்களை சேர்ந்த பல ரவுடிகள் நேபாளத்தில் பதுங்கி உள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Joses news © 2011