எலக்ட்ரானிக் பயணச்சீட்டு:

Monday 25 July 2011


சென்னை, ஜூலை 21: பேருந்துகளில் அதி நவீன கையடக்க மின்னணுக் கருவி மூலம் பயணச்சீட்டுகளை வழங்கிட ஏதுவாக, முதற்கட்டமாக 5,000 மின்னணுக் கருவிகளை வாங்கிடவும், மேலும் 250 பணிமனைகள், 19 கோட்டங்கள், 6 போக்குவரத்து தலைமையகங்கள் மற்றும் சென்னையில் அமையவுள்ள மத்தியக் கட்டுப்பாட்டு அறை ஆகியவைகளுடன் இணைக்கும் வகையில் கட்டமைப்புகளை உருவாக்கிடவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மக்களுக்கு அரசால் வழங்கப்படும் சேவைகள் துரிதமாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு புதிய திட்டங்களையும், வழிமுறைகளையும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. அரசால் வழங்கப்படும் சேவைகள் காலதாமதம் இன்றி பொதுமக்களை சென்றடைவதற்கு மின் ஆளுமை மற்றும் கணினிவழி சேவைகள் முக்கிய பங்காற்றி வருகின்றன.
அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில், வழக்கமான முறையில் அச்சடிக்கப்பட்ட பயணச்சீட்டுகள் வழங்கும் முறைக்கு மாற்றாக, நேரடித் தொடர்புள்ள கையடக்க மின்னணு கருவி மூலம் பயணச்சீட்டு வழங்கினால் பயணம் செய்பவருக்கு எளிதில் பயணச்சீட்டு வழங்கிட இயலும். அதே போன்று நடத்துனரின் பணியும் எளிதாகும்.
அதே சமயம், ஒவ்வொரு பேருந்துகளிலும் வழங்கப்பட்ட பயணச்சீட்டுகள் பற்றிய விவரங்கள், பணிமனைகள், மண்டல அலுவலகங்கள் மற்றும் கோட்ட அலுவலகங்களுக்கு உடனடியாக தெரிய வரும்.
மேலும், பயணச்சீட்டுகள் வழங்கும் போதே உடனடியாக ஆன்லைனில் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை, பயணிகள் மேற்கொள்ளும் பயணத்தின் தூரம், பேருந்துகள் உள்ள இடம் மற்றும் பேருந்துகள் சரியான நேரத்தில் இயக்கப்படுகிறதா என்ற விவரம் ஆகியவை போக்குவரத்துக் கழக அலுவலகங்கள் மற்றும் உயர் அலுவலர்களுக்கு உடனடியாக தெரிய ஏதுவாகும்.
எனவே, பேருந்துகளில் அதி நவீன கையடக்க மின்னணுக் கருவி மூலம் பயணச்சீட்டுகளை வழங்கிட ஏதுவாக, முதற்கட்டமாக 5,000 மின்னணுக் கருவிகளை வாங்கிடவும், மேலும், 250 பணிமனைகள், 19 கோட்டங்கள், 6 போக்குவரத்து தலைமையகங்கள் மற்றும் சென்னையில் அமையவுள்ள மத்தியக் கட்டுப்பாட்டு அறை ஆகியவைகளுடன் இணைக்கும் வகையில் கட்டமைப்புகளை உருவாக்கிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தை பல்லவன் போக்குவரத்து ஆலோசனை பணிக்குழு மூலம் செயல்படுத்திட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
இதற்காக பல்லவன் போக்குவரத்து ஆலோசனை பணிக்குழுவிற்கு 10 கோடியே 30 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை ஒப்பளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Joses news © 2011