சென்னை, ஜூலை 25: மே 22-ந்தேதி கூடிய புதிய அமைச்சரவை கூட்டத்தில் சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு நிறுத்திவைப்பது என்றும், பழைய பாடத்திட்டத்தை தொடர்வது என்றும் முடிவு செய்தது. சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதை பெற்றோர்கள், மாணவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே சமச்சீர் கல்வி பாட திட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான சட்ட திருத்தம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்தும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், சமச்சீல் கல்வி திட்டத்தை இந்த ஆண்டு அமல்படுத்த வேண்டும் என்று கூறியது தமிழக அரசு. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. சுப்ரீம் கோர்ட்டு, “தமிழக அரசு கடந்த ஆண்டு 1 மற்றும் 6-வது வகுப்புகளுக்கு தொடங்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடத்திட்டம் இந்த ஆண்டும் தொடர வேண்டும். மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி தொடர்வது குறித்து கல்வியாளர் குழு அமைத்து அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.
ஐகோர்ட்டு தீர்ப்பின்படி தமிழக அரசு பாடத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும், என்று தீர்ப்பு கூறியது. அதன்படி நிபுணர்களின் அறிக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான இருதரப்பு வாதங்களையும் கேட்ட ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் புதிய அரசு நிறைவேற்றிய சமச்சீர் கல்வி திருத்தச் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
1 முதல் 10-வது வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் இந்த மாதம் 22-ந்தேதிக்குள் சமச்சீர் கல்வி புத்தகத்தை அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது. இந்த தீர்ப்பையும் எதிர்த்து தமிழக அரசு கடந்த 19-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது.
சுப்ரீம் கோர்ட்டு கடந்த 22-ந்தேதி அளித்த தீர்ப்பில், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. அடுத்த மாதம் 2-ந்தேதிக்குள் சமச்சீர் கல்வி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. பெற்றோர் ஆசிரியர்கள் தாக்கல் செய்த கேபியட் மனு மீதும் சமச்சீர் கல்வி வழக்கு மீதும் நாளை (26-ந்தேதி) விசாரணை நடைபெறும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி நாளை மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெறுகிறது.